இலக்கிய வாசிப்பின் இன்றைய இன்றியமையாமை| ஆக்கம் : கார்த்திக்
இலக்கிய வாசிப்பும் சமூகமும்:
சிந்தனை வளர்ச்சியில் வாசிப்பின் பங்கு தவிர்க்க இயலாதது; மிகவும் வலுவான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது; எல்லாக் காலத்திற்கும் பொருத்தமுடையது. இலக்கிய வாசிப்பு கொண்ட சமூகம்தான், தன்னைத் தன்னிறைவுச் சமூகமாக உருவெடுக்கத் தன்னை இலக்கியம் வழி சீர்தூக்கிப் பார்க்கும். தமிழ் இலக்கியத்தைக் கால வாரியாகப் பகுத்தாலும் பாடுபொருள் வாரியாகப் பகுத்தாலும் அதில் இனங்காண முடிவது இலக்கிய வாசிப்பைக் கைக்கொள்வதால் நமக்குள் இருக்கின்ற நிறைகுறைகளைச் சீர்தூக்கிப் பார்க்க இயலும் என்பதைத்தான். இது தனி மனித அளவிலும் அமைந்திருக்கிறது; சமூக அளவிலும் அமைந்திருக்கிறது. இவ்வாறு முற்போக்கு ரீதியிலான மாற்றுச்சிந்தனைகளை உருவாக்கும் தோற்றுவாய்களாகவும் இலக்கிய வாசிப்பு வாயில்கள் அமைகின்றன. சமகால இலக்கியத் தளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ‘அறிவுச் சமூகம்’ என்னும் உயர்பண்பியலுக்கு வாசிப்பின் பரவலாக்கம் மிக முக்கியக் காரணியாக அமைந்திருக்கிறது. இலக்கியம் என்னும் அழகியலை ஒட்டி பேசப்படும் சிந்தனைகளைப் பயில்வது இலக்கிய வாசிப்பு என்று பொத்தாம்பொதுவாகக் கூறினாலும், அதைக்கடந்த வரையறையும், அதைக்கடந்த ஒரு அகண்ட பார்வையும் உள்ளூற உள்ளதை மறுக்க இயலாது.
இலக்கிய வாசகரும் எழுத்தாளரும்:
இலக்கிய வாசிப்பு என்பது ஏனைய வாசிப்பினைப் போல் அமைவதில்லை. இன்னும் கூறினால், வாசிக்கப்படும் பொருள், வாசிக்கப் பயன்படும் மொழிநடை ஆகியவற்றோடு மட்டும் பொது வாசிப்பு நின்றுவிடக்கூடியதில்லை. வாசிப்பு என்பது அறிவுலகில் மேலும் மேலும் முன்னேறிச் செல்வதற்கும், முன்னர் கடந்துவந்த பாதையைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் நம்மிடமுள்ள அறிவுப் புலத்தைப் பயன்படுத்தச் செய்யும் தூண்டுகோல். சங்க இலக்கியங்களில் சங்க கால மக்களிடைய வாழ்வியல் முறைமைகளைக் காண முடியும்; இன்றைய நவீன எழுத்தாளர்களின் படைப்புகளில் இன்றைய சமூக வாழ்வியலைக் காணமுடியும். எனவே காலத்திற்கேற்ற பட்டறிவு வெளிப்பாடுதான் இலக்கியத்தின் பொதுப்பொருண்மை. மேலும், காலச்சூழலை ஆவணப்படுத்தப்படும் இடமாக மட்டும் இலக்கியங்கள் அமையவில்லை. அவற்றை விமரிசனப் பார்வைக்குள்ளும் இட்டுக்கொண்டன. அதாவது சமூக யதார்த்தை வெளிப்படுத்தும் கருவியாக இலக்கியம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, திருக்குறளில் வாய்மை (உண்மை) பற்றி,
“வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்” (குறள்.291)
என்னும் குறளில், வாய்மை (உண்மை) எனப்படுவது யாருக்கும் தீங்கு இழைக்காத சொற்களைத்தான் குறிப்பிடுகின்றன என்று திருவள்ளுவர் விளக்கம் அளிக்கிறார். வாய்மை (உண்மை) என்பதைப் பற்றிய பொதுவான விளக்கத்தை வெகுசனப் பார்வையில் எதிர்நோக்கினால், பொய்-க்கு எதிர்மறையானது; சரியானதை மட்டும் குறிப்பிடுவது; என்று பொதுநிலைத்தன்மையுடைய விடைகள் கிடைக்கும். ஒவ்வொரு அகநிலை வெளிப்பாடுகளில், வெகுசனப் புலத்தை வாசிப்பாகக் கொண்டவரின் பார்வையும் வெகுசனத்தையும் உள்ளடக்கி பரந்துபட்ட இலக்கிய வாசிப்பைக் கொண்டவரின் பார்வையும் வேறு வேறானது. இந்த இரண்டின் நோக்கு வேறுவேறானதே தவிர இவ்விரண்டிற்கும் இடையே உயர்வு தாழ்வு என்று பார்ப்பது ஏற்புடையதில்லை. திருவள்ளுவர் இதில் வெகுசனத்தோடு இலக்கியப் பார்வையையும் கொண்டவர். இன்னும் கூறப்போனால் மக்கள் யதார்த்தநிலையை, மக்களின் அகநிலையுள் தன்னையும் உள்ளடக்கி எழுதியவர். ஆதலினால் தன் இப்படியொரு விளக்கத்தை அவரால் தர இயன்றது. இந்தக் கருத்துப் புலப்பாட்டை “தனிமனிதனுக்கும் சமுதாய நிலைக்கும் இடையேயுள்ள பேசப்படாத பக்கங்களையும் மாறுபட்ட கோணங்களையும் இலக்கிய வாசிப்பின் ஊடாக அடையலாம்” என்று இப்படியும் சொல்லலாம். இலக்கியங்களில் இருக்கும் மிதமிஞ்சிய கற்பனை வளம், யதார்த்த உலகிற்கு ஏற்றவகையில் வாசகர்களுக்குப் பயன்படுவதில்லை என்ற எண்ணமும் காலங்காலமாக இலக்கிய வாசிப்பாளர்கள் மத்தியிலும் திறனாய்வாளர்களின் மத்தியிலும் இருந்துவருகிறது. அழகியல் ஊடாகச் சமூகக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதுதான் இலக்கியத்தின் தனித்தன்மைக்குக் காரணமாக அமைவதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது புனைவுகளைச் சேர்த்துக் கருத்தைச் சொல்வதுதான் இலக்கியத்தின் தனித்தன்மையே! இன்னும் கூறப்போனால் இலக்கியங்கள் மீதான மனித வேட்கைக்குக் காரணமும் இந்த அழகியல் ஈர்ப்புதான். சொல்லப்படும் பாடுபொருள்கள் மீது வேண்டுமானால் வாசகர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். அதுவும் எழுத்தாளனின் நிறை குறையை அளவிடப் பயன்படும். மாறாக இலக்கியத்தைக் குறைசொல்வதும் இலக்கிய வாசிப்பைக் குறை சொல்வதும் எவ்விதத்திலும் அறத்தோடு பொருத்தவியலாது. இலக்கிய வாசிப்பு நிலைகளன்கள் இவ்வாறு இருக்க, சமகாலச் சூழல்பற்றிய ஒரு பருந்துப்பார்வையை இலக்கியவாசிப்பில் மையமிட்டுப் பார்க்கவேண்டும்.
இன்றைய இலக்கிய வாசிப்பு:
இலக்கிய வாசிப்பின் மிக முக்கியமான விளிம்புநிலை முன்னிறுத்துதலின் கோட்பாட்டுப் பரிணாமங்கள் தற்காலத்தில் தான் பெருமளவு நிகழ்ந்துவருகின்றன. பேசப்படாத பக்கங்களையும், ஒதுக்கிவைத்த பக்கங்களையும், ஏற்கனவே சொன்னவற்றை மீளாய்வு செய்வதும் என நவீனப்பரிணாமத்தை மாற்றுச் சிந்தனைகளின் வழி அமைக்க நவீன எழுத்தாளர்கள் அதிகளவில் முன்வந்தனர்; இன்றும் வருகின்றனர். குறிப்பாக மேலை நாடுகளில் கடந்த மூந்நூறு - நானூறு ஆண்டுகளுக்குள்ளாக ஏற்பட்ட புரட்சிகள் இதற்குக் காரணமாகவும் அமைந்தன. காலப்போக்கில் புரட்சிக்கான சமூக - பொருளாதாரத் தத்துவங்கள் எல்லாம் இலக்கியக் கோட்பாடுகளாக மாறத்தொடங்கின. ஆனால் மேலை நாட்களில் தொடங்கிய இந்த இலக்கியப் புரட்சி இந்தியா இலங்கை போன்ற கீழைநாடுகளுக்கு மெதுவாகத்தான் வந்தது. ஆனால் அவ்வாறு வந்ததிலும் ஐரோப்பியக் காலனியத்தின் பங்கும் முக்கியமானதுதான். இது பற்றி பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் தனது சமூக எதார்த்தமும் இலக்கியப்புனைவும் என்னும் நூலில் இடமமைந்துள்ள தமிழ் இலக்கியமும் சமூகமும் என்னும் கட்டுரையில் விரிவாகப் பேசியிருக்கிறார். மேலும் அறிய விரும்பினால் அக்கட்டுரையை வாசிக்கவும். தனிமனித துதி, இறைவன் துதி, சிற்றின்ப நுகர்வுக்கான இலக்கிய நுகர்வு என்று சென்று இருந்த பதினாறு – பதினேழாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியச் சூழல் பொதுவுடைமை, விளிம்புநிலை, சிறுபான்மை என்று பேசப்படாத சூழலுக்குள் இலக்கியப் பகுப்பை இக்காலகட்டத்தில் தான் கொண்டு சென்றன. இதற்கு வாசகர்களும் பெருகத் தொடங்கியதுதான் இங்கு குறிப்பிடவேண்டிய விடயம். அதாவது சமகால இலக்கியக்களில் உள்ள பாடுபொருளும், கதை மாந்தர்களும், சூழலியல் காரணிகளும் வாசகரை மையமிட்டதுதான். எனவே தன்னியல்பாக சமூக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் இலக்கியங்களுக்கு வாசகர் பட்டாளம் இன்று அதிகமாக உருவாகிவிட்டன. பல செறிவான எழுத்தாளர்களும் வாசகர் நிலையிலிருந்து வந்தவர்களே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஏற்பட்ட இறுதிப்போர்ச்சூழல், தமிழகத்தில் ஏற்பட்ட இதன் தக்கம் ஆகியவை நவீன தமிழ் இலக்கியங்களிலும் தக்கத்தை ஏற்படுத்தின. இனம் – மொழி – பண்பாடு என்னும் இலக்கிய ஆக்கங்களும் வாசிப்புத் தேடல்களும் கடந்த பத்து ஆண்டுகளில் மனிதத்தின் மீது சாய்ந்தன, விளிம்புநிலையை முதன்மைப்படுத்தின. குறிப்பாகத் தமிழகச் சூழலில் விளிம்பு நிலைச் சிந்தனை வலுவூன்றி வருவதற்கு அடிப்படையாக இதுவும் ஒரு முக்கியக் காரணம். அதிகாரமற்றவர்களை அதிகாரப்படுத்துதல் என்னும் இலக்கை அடிப்படையாகக் கொண்டு தமக்குள் உள்ள அகமுரண்களைக் குறித்த ஆழ்வாசிப்புப் பழக்கம் சமகாலத்தில் ஏற்பட்டிருக்கிறதை நல்ல விளைவாகவே பார்க்க இயலுகிறது. இலக்கியத்தைத் தத்தம் கொள்கைகளுக்கு ஏற்பப் பிரச்சாரத்தின் வடிவாக மாற்றிவந்த நிலைமாறி இதுவரை பேசப்படாத சமூக அவலங்களைப் பேசுவதற்கான ஆயுதமாக மாறி இருக்கிறது. குறிப்பாகத் தமிழகத்தில் நீலம், மணற்கேணி, கீற்று முதலிய இதழ்கள் இந்த வகையில் குறிப்பிடத்தக்கன.
இப்போதைய தேவை:
இணையவெளியின் வளர்ச்சியானது இலக்கியச்சூழலின் இன்னொரு பரிணாமத்தைக் கொணர்ந்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் ஆண்டுவரும் கொரானாப் பரவலின் தாக்கத்தால் இணையவெளி வாசிப்புப் பழக்கமும், கருத்தாடல் நிகழ்வுகளும் அதிகளவு நடந்திருக்கின்றன. குறிப்பாக மின் வடிவிலான நூல்கள், சஞ்சிகைகள் என இணையவெளியில் சமகாலத்தை மையமிட்ட ஆக்கங்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்இணையச்சூழலில் வாசகர்களைத் தாண்டி எழுத முனையும் முகிழ்நிலை எழுத்தாளர்கள் அதிகம் வெளிவந்துள்ளமையையும் இங்கு நோக்க வேண்டும். இந்த நிலையானது தமிழுக்கு இப்போது புதிது. இணையவெளியில் எழுதுவதற்கான இணையச்சஞ்சிகைகள், கிண்டில் பதிப்பு நூல்கள் என எந்தத் தடையும் எழுதுவதற்கு இல்லை என்னும் நிலை வலுவூன்றியிருக்கின்றது. எனவே எழுத எண்ணுவோர் இலக்கிய உலகில் முதல் அடி எடுத்துவைப்பதற்கு எவ்விதத் தடையும் இப்போது இல்லை. அடுத்த இலக்காக எழுதப்படும் இலக்கியங்களைத் தரப்படுத்தவேண்டும். அதனைப் பரந்துபட்ட வாசிப்பின் ஊடகத்தான் நிகழ்த்தமுடியும். இதனை மனதில் கொண்டு இனி வாசிப்பினை ஓர் இயக்கமாக வளர்க்க வேண்டிய தேவையை உருவாக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக